Friday, October 11, 2013

பொன்வண்ணக்காரிளை

நுட்பத்திற்கென செவி கூர்ந்திருக்கும் தருணம்
செம்மொழிக் கலைஞனொருவன்
மேடையேறுகிறான்
ஆன்மாவை விளக்கத் துவங்கியதும்
ஆன்மீகமா என்றவாறு பின்னுக்குச் சாய்கிறேன்
எனை வசதியாக இருத்திக் கொள்கிறதந்த
பொதுக்கூட்ட நாற்காலி
இருளின் கரங்களில் பூமி துவள்கிறது
ஒற்றை ஒளியென
அவனையே பார்ததபடியிருக்கின்றன
ஓராயிரம் கண்கள்
ஆரம்பித்த இடத்திலிருந்து
அரசியல் அன்றாடமென
அரிய சொல்லாடல்கள்
அநாயாசமாய் அள்ளித் தெளிக்கிறான்
ஆன்மக் கவிதைக்கான தேடலில்
இன்றுவரை காத்திருந்து தோற்றதாகச் சொல்கிறான்
வெளுத்த கேசம் வெண் தாடி
மாசடைந்த கண்கள்
கறுத்த உதடுகள் பேசுவதத்தனையும்
ஒளிரும் மனதின் திமிர்ந்த கருத்துக்கள்
பார்த்துக் கொண்டேயிருந்தேன்
பேசிக் கொண்டேயிருந்தான்
பெருமழையடித்த பின் சொட்டும் நீர்போல்
என்னுள் இலக்கியம் சேகரமாகியது
வெற்றுக்கால்கள் நாலுமுழ வேட்டியுடன்
மேடை விட்டிறங்கியவன்
காலில் விழ எத்தனிக்கையில்
எப்போதும் போல
தடுத்துவிட்டதென்னுள்ளிருக்கும் மிருகம்
குறைந்தபட்சம் கைகுலுக்கி
அறிமுகமேனும் நடந்தேறியிருக்கலாம்
அதுவுமின்றி ....
வெளிச்சத்தில் சிக்கினால்
நகக்கண்ணில் படிந்திருக்கும் கந்தகச் சேர்மங்கள்
எழுத்தின் வழியிறங்கி
ஏதோவொரு ஆதிக்க வர்க்கத்தை
எரியூட்டும் நிச்சயம்

No comments:

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!